கூடிய சீக்கிரம் மதுரையில் எய்ம்ஸ் வரும்னு சொல்றாங்க! - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை: எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் பணி தொடங்கும் என மத்திய அரசு கூறியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி புதிய அவசர சிகிச்சை மையம், அறுவை சிகிச்சை மையம் மற்றும் தீக்காயபிரிவு கூடுதல் அறை உள்ளிட்ட திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மேயர் இந்திராணி, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் , சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், கோ.தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்னுயிர் காப்போம் திட்டம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், "இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்களில் 44,105 பேர் பயன்பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 60 லட்சத்து ஒன்றாவது பயனாளியை நேரடியாக சந்தித்து மருந்து பெட்டகம் வழங்கியுள்ளோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 207 முன்றாம் பாலினத்தவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படு உள்ளது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை
வரும் நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையில் மூன்றாம் பாலினத்தவர்கள் அறுவை சிகிச்சைக்கு கூடுதல் நிதியை அறிவிக்க உள்ளோம். மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நிதி உதவி திட்டத்தின் கீழ்ரூ.128 கோடி மதிப்பிலான 6 அடுக்கு கட்டிட பணிகளும், ரூ.139 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்.

கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்
தைராய்டு நோய்க்கு என்டோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா இறப்பு என்பதே இல்லாத நிலை நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தபோதிலும் மூன்று மாதங்களுக்கு கொரோனா வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது எனவே கொரோனா தொற்றின் அச்சம் பெரிய அளவில் குறையவில்லை. XE கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை. புதிய தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

விரைவில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி
கொரோனா நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஒப்பந்த பணிக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒப்பந்த பணிகள் முடிவடைந்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். காலிப்பணியிடங்களில் நியமனங்களில பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
ஒப்பந்த பணியாளர்கள் , தொகுப்பூதிய பணியாளர்கள் பணியில் உள்ள நிலையில் அவற்றை சீரமைத்த பின்னர் தேவையறிந்து காலிப்பணியிடங்கள் நிரப்பபடும். புதிய பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருந்தகங்களிலும் போதை மாத்திரை விற்பனை குறித்து சுகாதாரத்துறை மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

490 டன் குட்கா பறிமுதல்
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 490 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணியமர்த்தபட்டுள்ளனர். மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களில் நிரப்பும்போது முன்னுரிமை வழங்கப்படும்." என்றார்.