அணைக்கரை முத்து மரணம்...அவசர பிரேத பரிசோதனை ஏன்... நீதிபதி கேள்வி...மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு!!
மதுரை: தென்காசியில் வனத்துறையினர் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் அணைக்கரை முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து இந்த சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார், அதில், ''எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இரவு 11 மணிக்கு எங்களது வீட்டுக்கு வனத்துறையைச் சேர்ந்த நெல்லி நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி ஆகியோர் வந்தனர். எனது கணவரை அருகில் இருக்கும் சிவசைலம் பங்களா குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.
விசாரணைக்கு என்று அழைத்து சென்றுவிட்டு, எனது கணவரை இரவு நேரத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த உண்மை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். தடவியல் துறை தலைவர் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை நடக்கவில்லை.
ஆகவே எனது கணவரின் உடலை மீண்டும் மூத்த தடவியல் மருத்துவக்குழு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அணைக்கரை முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வீடியோ பதிவுடன், நிலை அறிக்கை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ''தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பிரேத பரிசோதனை செய்தது ஏன்?'' என்றார்.
அரசு தரப்பில் பதில் அளித்த வழக்கறிஞர், ''அணைக்கரை முத்துவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் வேகமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு மாட்டக் கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதி பெற்றுதான் செய்யப்பட்டது'' என்றார்.
சுஷாந்த் சிங்கின் மரணம் பக்கா கொலை.. இதுதான் ஆதாரம்.. லிஸ்ட் வெளியிட்டார் சுப்பிரமணியன் சுவாமி
இதற்கு பதில் அளித்திருந்த நீதிபதி, ''அணைக்கரை முத்துவின் உடலில் நான்கு இடங்களில் காயம் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு தலைமையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.