ஒரு வாரத்திற்குள் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி
மதுரை: இன்னும் ஒரு வாரத்திற்குள், தமிழகத்திற்கான புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ஹைகோர்ட் மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று இவ்வழக்கில், நீதிபதிகள், தங்கள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மத்திய ஆய்வு குழு கடந்த வாரம் 3 நாட்கள் ஆய்வு செய்துள்ளது. அந்த குழு இன்னும் 2நாட்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையை பரிசீலித்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு, நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக ஒரு மாத காலம் அவகாசம் வாங்கித் தர, சிபிஎஸ்இ அமைப்பிடம் கலந்து பேசி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க, வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். மண்ணெண்ணை உள்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டும். மண்ணெண்ணெய், ஸ்டவ் அடுப்பு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.