மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்
மதுரை : மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்தது.

இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர். மதுரை ஆதீனம் உடல்நலத்தில் முன்னேற்றம் பெற்று , விரைவில் பூரண குணமடைந்து மதுரை ஆதினத்திற்கு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர்,
எனினும் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரதுமறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்த மதுரை ஆதீனம் மடத்திற்கு மடாதிபதியாக 292 பேர் இருந்துள்ளனர் 292வது மடாதிபதி தான் அருணகிரிநாதர் ஆவார். அதாவது மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் என்று அருணகிரிநாதர் அழைக்கப்படுகிறார்.