திருக்குரான் வாசித்த மதுரை ஆதினம்... எஸ்டிபிஐ கட்சியினருக்கு திருநீறு பிரசாதம் கொடுத்து ஆசி
மதுரை: எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்திக்க வந்த போது மதுரை ஆதீனம் தான் வைத்திருந்த இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை வாசித்துக் காட்டியதோடு அவர்களுக்கு திருநீறு கொடுத்து ஆசி வழங்கினார்.
292 வது மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் முக்தியடைந்த நிலையில், மதுரை ஆதினத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

292 வது மதுரை ஆதினம் அனைத்து சமுதாயத்தினருடன் நல்லுறவை பேணிக்காத்து வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற 293 வது ஆதினம் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் மதுரை ஆதீனம்.
யாராவது கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்கு கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள். இல்லை என்றால், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி மற்றும் மூஞ்சுறு எலியாகப் பிறக்க நேரிடும். சிவன் சொத்து குலநாசம் என்று கோபமாக பேசியுள்ளார் மதுரை ஆதீனம். மடாதிபதிகள் காரில் வரக்கூடாதா என்றும் அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம்... போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் மதுரை ஆதினத்தை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், அப்துல் சிக்கந்தர் ஆகியோர், மதுரை ஆதீனமாக பதவியேற்றதுக்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சமூக நல்லிணக்கம் குறித்து விரிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை சந்தித்த போது மதுரை ஆதீனம் தான் வைத்திருந்த இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை வாசித்துக் காட்டியுள்ளார். மேலும் தன்னை சந்திக்க வந்த எஸ்டிபிஐ கட்சியினருக்கு திருநீறு, குங்குமம் கொண்ட பிரசாத பையை வழங்கினார்.