மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா..ஆக.12ல் திருத்தேரோட்டம் காண தயாராகும் பக்தர்கள்
மதுரை: அழகர் மலை கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 4ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தன.
இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைதொடர்ந்து 5ஆம் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெற்றது. 6ஆம் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7ஆம் தேதி மாலையில் கருட வாகனத்தில் அழகர் எழுந்தருளினார். 8ஆம் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார். அப்போது ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
நேற்றைய தினம் மாலையில் யானை வாகனத்திலும், இன்று மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி அளிக்கிறார். நாளைய தினம் மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு பூப்பல்லாக்கும், 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகர் கோவிலில் தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.