தேரோடும் எங்க சீரான மதுரையில... மாசி வீதிகளில் ஓடிய தேர் சித்திரைக்கு மாறிய காரணம் தெரியுமா
மதுரையில் மாசி மாதத்தில் மாசி வீதிகளில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் சித்திரை மாதத்திற்கு மாறி சித்திரை திருவிழாவாக நடைபெறுகிறது.
மதுரை: சித்திரை மாதத்தில் மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டிருக்கும். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மறுநாள் மாசி வீதிகள் தேரும் திருவிழாவுமாக மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இந்த ஆண்டு திருவிழாவும் இல்லை தேரும் ஓடவில்லை. மக்கள் வீட்டை விட்டு வராமல் முடங்கிப்போயுள்ளனர். மாசி திருவிழாவின் போது மாசி மாதத்தில் வலம் வந்த தேர் திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
Recommended Video
மதுரை நகரம் புராண சிறப்புக்கள் கொண்ட நகரம். 3000ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் நடைபெற்ற நகரம். சித்திரை தொடங்கி பங்குனி வரைக்கும் 12 மாதத்திலும் திருவிழா நடைபெறும். சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமே பட்டாபிஷேகமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம்தான்.
இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவது சிறப்பு. மதுரையில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு திருவிழாக்கள் எதுவும் நடைபெறாவிட்டாலும் திருக்கல்யாணம் மட்டுமே நான்கு சிவாச்சாரியார்களுடன் நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருக்கல்யாணத்தை காண முடியாத பக்தர்களின் குறையை போக்கும் வகையில் தம்பதி சமேதராக மீனாட்சி பிரியாவிடை அம்மன், சுந்தரேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பு. வடக்குமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, கீழ மாசி வீதி ஆகிய நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருளும் போது தேவாதி தேவர்களும் எழுந்தருளுவார்கள் என்பது ஐதீகம். எனவேதான் தேரோட்டத்தை தரிசித்தால் அம்மை அப்பனுடன் தேவர்களையும் தரிசிக்கலாம் என்பதற்காகவே பக்தர்கள் கூடுவார்கள்.
சித்திரைக்கு மாறிய தேரோட்டம்
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த தேரோட்டம் மாசி மாதத்தில் நடைபெற்றது. எனவேதான் அந்த வீதிகளுக்கே மாசி வீதிகள் என்று பெயர் வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில்தான் கள்ளழகர் கோவில் திருவிழாவுடன் இணைந்து சித்திரை மாதத்திற்கு மாற்றினார் திருமலை நாயக்கர்.
மாசி வீதிகளில் தேரோட்டம்
மதுரையில் இந்த தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் வலம் வரும். பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே தேர்கள் ஆடி அசைந்து அழகு மிளிர மிதந்து வரும் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவார்கள்.
சித்திரை தேரோட்டம்
வாண வேடிக்கை மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஒன்று கூடி தேரினை இழுத்து வருவார்கள். அப்போது பக்தர்கள் எழுப்பும் சம்போ மகாதேவா என்ற முழக்கம் விண்ணை எட்டும். மீனாட்சி சுந்தரேஸ்வரா மகா தேவா என்று பக்தி முழக்கத்துடன் திருத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் தேரோட்டம் நடைபெறவில்லை. திருக்கல்யாண நிகழ்வினை கண்ணார நேரலையில் கண்டு தரிசித்த மக்கள் தேரோட்டம் நடைபெறவில்லையே என்று கவலையடைந்துள்ளனர்.