புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு பிளான் பண்றீங்களா.. ஸாரி பாஸ்.. இதைப் படிங்க முதல்ல!
மதுரை : புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், ஜாலி ரைடுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
நான் கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அண்ணாநகரில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர் தன் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.
அந்த விபத்தில் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, செய்த வேலையும் பாதிக்கப்பட்டது. மேலும் எனது குடும்பத்தின் நிலையும் தலைகீழாக மாறி விட்டது. இவ்வாறு அந்த மனுவில் ராமமூர்த்தி கூறியிருந்தார்.
அந்த வழக்கானது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், புத்தாண்டில் மதுரையில் ஜாலி ரைடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு அன்று ஜாலி ரைடு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதேபோல் புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.