மாற்றுத்திறனாளி மகனை சுமந்து சென்ற தாய்.. உருகிய கலெக்டர் செய்த பேருதவி... இதயங்களை வென்ற அன்பழகன்!
மதுரை: மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மதுரை கலெக்டர் தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் வழங்கி அசத்தினார்.
அத்துடன் நின்று விடாமல் அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து அதனை ஒட்டிச் சென்றார் கலெக்டர் அன்பழகன்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தாயின் கோரிக்கையை அற்புதமாக நிவர்த்தி செய்த கலெக்டர் த.அன்பழகன் ஒரே நாளில் அனைவரின் இதயங்களையும் வென்று விட்டார்.
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியது திமுக... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக சம்மதம்!
மாற்றுத்திறனாளி இளைஞர்
மதுரை முடக்காத்தான் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் பழனிகுமார். மாற்றுத்திறனாளியான பழனிகுமார் சிறிது மனநலம் குன்றியவர் ஆவார். மற்ற இளைஞர்கள்போல் சுற்றித் திரிய வேண்டிய வயதில் நம் மகன் மட்டும் இப்படி துன்பப்படுகிறானே என்ற கவலை மாரீஸ்வரியை ஒருபக்கம் வட்டினாலும், கடந்த 22 ஆண்டுகளாக ஒரு தாய்க்கே உரிய அன்புடனும், கனிவுடனும் பழனிகுமாரரை பராமரித்து வளர்த்து வருகிறார்
கலெக்டர் ஆபிஸ்
கலெக்டர் ஆபிசுக்கு நடையாய் நடந்தார் பழனிகுமாரால் நடக்க முடியாததால் எங்கு சென்றாலும் சிறு குழந்தையைபோல் பழனிகுமாரை இடுப்பில் சுமந்து கொண்டு செல்வார் இந்த புண்ணிய தாய். மகனுக்கு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மாரீஸ்வரியிடம் வசதி இல்லை. இதற்கு அவர் முழுவதும் எதிர்பார்த்தது அரசைதான். தனது மகனுக்கு இரு சக்கர வாகனம் வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக அவர் மதுரை கலெக்டர் ஆபிசுக்கும், வீட்டுக்கும் மகனை தூக்கிக் கொண்டு நடையாய் நடந்தார் மாரீஸ்வரி.
தாயின் நம்பிக்கை
ஆனால் அங்குள்ள அதிகாரிகளின் மனம் முடமாகி இருந்ததால் மாரீஸ்வரி மனுவை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனாலும் இந்த அதிகாரிகள் என்றாவது ஒருநாள் கண் திறப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் மாரீஸ்வரி. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர் மதுரை கலெக்டர் த.அன்பழகனிடம் மனு கொடுத்திருந்தார்.
மனம் இறங்கிய கலெக்டர்
மாற்றுத்திறனாளியான தனது மகனை எங்கு சென்றாலும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு செல்கிறேன். 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எனது மகனுக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று கண்ணீர்மல்க கூறினார். இதைக் கேட்ட கலெக்டர் அன்பழகனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது.
இரு சக்கர வாகனம் வழங்கி ஓட்டினார்
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக தனது உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் தனது சொந்த செலவில் புதிய வடிவமைப்பில் பழனிகுமார். அமரக்கூடிய வகையில் இருக்கையுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை வழங்கினார். அத்துடன் நின்று விடாமல் அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து அதனை ஒட்டிச் சென்றார் கலெக்டர் அன்பழகன். இதனை பார்த்த அந்த தாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்ணீர்மல்க தனது இரு கரத்தையும் குவித்து கலெக்டருக்கு நன்றி செலுத்தினார் அந்த தாய்.
இதயங்களை வென்று விட்டார்
கலெக்டரின் பின்னால் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளி இளைஞர் பழனிகுமார் சொர்க்கத்தில் மிதந்தார் என்றே கூறலாம். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தாயின் கோரிக்கையை அற்புதமாக நிவர்த்தி செய்த கலெக்டர் த.அன்பழகன் ஒரே நாளில் அனைவரின் இதயங்களையும் வென்று விட்டார். கருணையுள்ளம் கொண்ட கலெக்டர் அன்பழகன் இவ்வாறு செயல்படுவது இது முதல்முறை அல்ல.
ஓட்டுனரை காரில் அழைத்து சென்றார்
வாடகை வீட்டிற்கான முன்தொகையை தரமறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவரை தனது காரிலயே அழைத்து சென்று பண உதவி செய்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் கலெக்டர் அன்பழகன். கரூரில் பணிபுரிந்தபோது பணிஓய்வுபெற்ற தனது ஓட்டுனரை தானே காரை ஓட்டியபடி வீட்டிற்கு அழைத்துசென்றும் பலரது பாராட்டுகளை பெற்றவர் இந்த மனிதநேயம் கொண்ட கலெக்டர்.