கொலை மிரட்டல் புகார்... மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் நிர்வாண ஓட்டம்
மதுரை: கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மதுரை கே.கே நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாமி, இவர் மதுரை மாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
மதுரை வண்டியூர் மனமகிழ் மன்றம்
அதில், மதுரை வண்டியூர் பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது.
மன்றத்தில் வெட்டு சீட்டு, ரம்மி சீட்டு, கஞ்சா விற்பனை மற்றும் போலி மது விற்பனை நடைபெறுகிறது.
கொலை மிரட்டல்
எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அறிந்த தனியார் மனமகிழ் நிர்வாகத்தினர் வழக்கறிஞர் சாமியை நேரில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் பதட்டம்
இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மேலும் தனக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆடைகள் இல்லமால் நிர்வாணமாக ஒடி வந்தார்.
போலீஸ் விசாரணை
ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்க்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ஆடைகளை அணிவித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.