அதிகரிக்கும் கொரோனா... அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மதுரை மாநகராட்சி..18 தெருக்கள் மூடல்
மதுரை: கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்படும் இடங்களை மூட மதுரை மநாகாட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தைத் தவிரவும் கோவை, ஈரோடு, தஞ்சை, மதுரை உள்ள மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரையில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதுரை கொரோனா பாதிப்பு
மதுரையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 10 நாட்களில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரையில் 83 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சுமார் 58 பேர் மதுரை நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தெருக்களை மூட உத்தரவு
வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மதுரை ஆணையர் ச.விசாகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கெனவே பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளையும் தெருக்களையும் மூட முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் தெருக்களை மூடும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 தெருக்கள்
மேலும், அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் கபசுரக் குடிநீரையும் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தெருவில் மூன்றுக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில் அந்த தெருவை முற்றிலுமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்படி முதல்கட்டமாக இதுவரை 18 தெருக்களை மதுரை மாநகராட்சி மூடியுள்ளது.
பரிசோதனையை அதிகரிக்கத் திட்டம்
கடந்த ஓர் ஆண்டாக கொரோனா பரிசோதனை முகாம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும்கூட, வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்களில் சோதனையை அதிகப்படுத்தவும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.