சபாஷ் மதுரை மாநகராட்சி..! ரூ.100 விலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகம்
மதுரை: கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்து பெட்டகத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறது.
ரூ.250 மதிப்புள்ள இந்த மருந்து பெட்டகம் ரூ.100-க்கு கிடைப்பதால் மதுரை மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இதனை வாங்கி வருகின்றனர்.
மேலும், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை பார்சல் அனுப்புகின்றனர்.
'கொரோனாவை கொல்லும் மைசூர்பா..' கிலோ ரூ.800.. சிக்கிய கோவை இனிப்பகம்.. சீல் வைத்த அதிகாரிகள்
மதுரை மக்கள்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா வேகமாக பரவும் ஊர்களில் மதுரையும் ஒன்று. இதனால் தான் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கெடுபிடிகள் காட்டப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்து பெட்டகத்தை ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.100க்கு கொடுத்து வருகிறது. இந்தப் பெட்டகத்தை வாங்கிச்செல்ல மதுரை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மருந்துப் பொருள்
மாநகராட்சி வழங்கும் இந்த பெட்டகத்தில் கபசுரக் குடிநீர் பொடி 50 கிராம், தாளிசாதி சூரணம், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆடாதொடை மனப்பாகு, ஆர்சனிக் ஆல்பம் 30 சி உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. இதனை தனித்தனியாக வாங்கினால் அதற்கு ரூ.250 வரை செலவாகும் நிலையில் ரூ.100-க்கு கிடைப்பதால் இந்த மருந்து பெட்டகம் விரைவில் விற்றுத்தீர்ந்து விடுகிறது. இதனால் மருந்துப் பொருட்களை மேலும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பகுதிகள்
மதுரை மாநகராட்சி முன்னெடுத்துள்ள இந்த சீரிய முயற்சியை அனைத்து பகுதிகளிலும் அரசு நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். சித்த மருந்து உற்பத்திக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி ஊக்குவித்தால் எதிர்க்காலத்தில் மூலிகை மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைக்கக்கூடும். இதனிடையே மதுரை மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை மற்ற ஊர்களில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இலவசமாக
மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், தன்னார்வலர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இதை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.