வேகம் காட்டும் மதுரை மாவட்ட கலெக்டர்... முழுவீச்சில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள்
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள, மதுரை ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
வட்டாட்சியர் சம்பூர்ணத்தை மையத்திற்குள் செல்ல அனுமதித்த, மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி, பணியில் இருந்த காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த நாகராஜன், மாவட்ட ஆட்சியராக இன்று பதவியேற்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முழு வீச்சில் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, மே 23 ம் தேதி, மதுரை மக்களவைத் தொகுதிகளின் வாக்குகள், மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. அங்கு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதவியேற்ற உடனே, தேர்தல் பணிகளில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வேகம் காட்டி வருகிறார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி... மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார்
மேலும், தற்போது உள்ள 9 பறக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.