மகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..!
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் திருமண சீர்வரிசை செய்தது அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
Recommended Video
பாத்திரங்கள் தொடங்கி கட்டில், பீரோ வரை சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்த சரவணன் எம்.எல்.ஏ. திருமண விருந்துக்கான செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.
அரசியலில் கிடைத்த வரை லாபம் என சுருட்டிக் கொண்டு ஓடும் காலத்தில் இது போன்று நல்லது செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சார்ந்தவர் மலைச்சாமி. இவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி ஆனந்த ஜோதி மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஆனந்த ஜோதி, தனது மகள் அபிராமிக்கு வரன் பார்த்திருக்கிறார்.
திருமண உதவி
இந்நிலையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்து என்பவருக்கு தனது மகள் அபிராமியை திருமணம் செய்ய நிச்சயம் செய்த அவர் தனது தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் டாக்டர் சரவணனை சந்தித்து உதவிக் கேட்டிருக்கிறார் ஆனந்த ஜோதி. அவரிடம் தைரியமாக போங்க பார்த்துக்கலாம் என அனுப்பி வைத்த சரவணன் எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியிலிருந்து பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், கேஸ் அடுப்பு, சில்வர் பாத்திரங்கள் என அனைத்து சீர் வரிசை பொருட்களையும் மணமக்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
நேரில் நன்றி
எதிர்பார்த்து சென்றதை விட ஒரு படி மேலாகவே உதவி கிடைத்ததால் ஆனந்த ஜோதி கண்ணீர்மல்க டாக்டர் சரவணனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதனிடையே திருமணத்தில் கலந்துகொண்ட சரவணன் எம்.எல்.ஏ. மணமக்களுடன் விருந்து சாப்பிட அமர்ந்த போது, அவரை சந்தித்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறையாக நேரில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சரவணன் விளக்கம்
மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றவே "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்ச்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாகவும், அந்த வகையில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் மகள் திருமணத்துக்காக தன்னிடம் உதவிக் கேட்ட ஏழைத் தாய்க்கு உதவுவது தனது கடமை எனவும் தெரிவித்திருக்கிறார் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ.