திருமங்கலமே திகைத்து போச்சு.. அப்படியே தண்ணீரில் மிதந்த விவசாயி இன்பராஜ்.. மலைக்க வைக்கும் போராட்டம்
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்
மதுரை: அப்படியே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறார் இன்பராஜ்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து இந்த நூதன போராட்டத்தை மதுரை திருமங்கலத்தில் மேற்கொண்டு வருகிறார் விவசாயி இன்பராஜ்!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில், பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இது 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.. ஆனால் பேச்சுவார்த்தைகள் பல நடத்தப்பட்டும், அத்தனையும் தோல்வியில் முடிந்து விடுகிறது.. இந்நிலையில் நாளைக்கு அதாவது 8-ந்தேதி மறுபடியும் 8வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த போகிறார்கள். இதிலாவது தீர்வு எட்டப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ஆனாலும், விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.. டெல்லியில் இப்போது மோசமான வானிலை நிலவுகிறது.. உடம்பையே குத்தி எடுக்கும் குளிர் வாட்டி எடுக்கிறது.. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பெரும்பாலும் வயசானவர்கள்தான்.. இந்த முறை 15 வருஷங்களில் இல்லாத அளவுக்கு குளிர் டெல்லியை வாட்டுகிறதாம்.. இதில் மழையும் சேர்ந்து பொழிகிறது.. அதனால் அங்கு குளிர் இன்னும் மோசமாக இருக்கிறது..
இருந்தாலும் தங்கள் உடல்நிலையை பற்றி கவலையே கொள்ளாமல் மனஉறுதியோடு வயதான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.. அந்த வகையில் மதுரையில் இன்றும்கூட ஒரு போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், இது தனி நபர் மேற்கொண்ட நூதன போராட்டம்.. திருமங்கலம் அடுத்துள்ள தும்பகுண்டு கிராமத்தை சேர்ந்த பொன் இன்பராஜ்...
இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்... விவசாயிகளை பாஜக அரசு தொர்ந்து வஞ்சித்து வருவதை கண்டு இன்பராஜ், இன்று அதிரடியான போராட்டத்தை கையில் எடுத்தார்.. அதன்படி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திருமங்கலம் பகுதியில் 58 கால்வாய் நிரந்தரமாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தியும், 24 மணி நேரம் ஒரு நாள் தண்ணீரில் மிதந்து எதிர்ப்பை காட்டும் வகையில் நூதன முறையில் விவசாயி போராட்டம் நடத்தி வருகிறார்.
தன்னுடைய இரு கைகளிலும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஒரு நோட்டீஸ் போர்டை கையில் பிடித்து கொண்டு, தண்ணீரில் அப்படியே மிதக்கிறார் இன்பராஜ்.. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் விவசாயிகள் இப்படி தொடர் போராட்டங்களை நடத்த தொடங்கியிருப்பது எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்கிறார்கள்.