மதுரை மீனாட்சி கோயிலுக்காக வந்த 'மலச்சி' பிச்சை எடுத்த பரிதாபம்.. இப்ப வனத்துறை கட்டுப்பாட்டில்!
Recommended Video
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய அந்தமான் யானையை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுரை வனத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
2007-ஆம் ஆண்டு அந்தமான் பகுதியிலிருந்து மலச்சி என்ற யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்காக தானமாக வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு என கூறி அந்தமானில் இருந்து தானமாக யானையைப் பெற்று மதுரையில் பிச்சை எடுக்க, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கபட்ட சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வனவிலங்கு ஆர்வலர் முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார் அதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்றம் உரிய ஆவணம் இல்லை என கூறி யானையை பறிமுதல் செய்து யானைகள் காப்பகத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட வன அதிகாரிகள் மதுரை தென்பழஞ்சி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான உரிய அனுமதி இல்லாமல் கோவிலுக்கு என கூறி லட்சுமணன் என்பவர் வைத்திருந்த யானையை மதுரை வனத்துறை அதிகாரி சாபாப் தலைமையில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
யானைக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின்பு யானையை திருச்சி உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமிற்கு அல்லது கோயம்புத்தூரில் உள்ள யானை பாதுகாப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிய அனுமதி இல்லாமல் 5 யானைகள் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் லட்சுமணன் என்பவரது யானையும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.