கரண்ட் போனதற்கும், 5 பேர் பலியானதற்கும் சம்பந்தம் இல்லை.. இயற்கை மரணமே.. மதுரை அரசு மருத்துவமனை டீன்
அரசு ஆஸ்பத்திரியில் 3 பேர் மரணம் இயற்கையானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
மதுரை: கரண்ட் போனதற்கும், 5 பேர் உயிரிழந்ததற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், அவை அனைத்துமே இயற்கை மரணங்கள்தான் என்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று சாயங்காலம் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. இதனால் மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரி உட்பட பல்வேறு இடங்களில் கரண்ட் போய்விட்டது.
இதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அந்த ஜெனரேட்டரும் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டதுடன் ஆஸ்பத்திரி முழுக்க கரண்ட் இல்லாமல் போய்விட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மரணத்தில் திடீர் திருப்பம்.. கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்
உறவினர்கள் ஆவேசம்
இதனால் வென்டிலேட்டர் கருவிகளும் செயல்படாததால் வெறும் 5 நிமிடங்களில் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர் என்றும் பின்னர் பலி எண்ணிக்கை 5 என்றும் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதாகவும், சமாதான பேச்சு நடந்ததாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வந்துகொண்டே இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வனிதா விளக்கம்
இந்நிலையில், வென்டிலேட்டர் வேலை செய்யவில்லை என கூறப்படுவது உண்மையில்லை என்றும், அதனால் எந்த உயிரிழப்புகளும் நடக்கவில்லை என்றும் ஆஸ்பத்திரி டீன் வனிதா விளக்கம் அளித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது சொன்னதாவது:
10 நோயாளிகள்
"6.20-க்கு ஆஸ்பத்திரியில் கரண்ட் போனது. வென்டிலேட்டரை நல்லா செக் பண்ணி பேட்டரி சரிபார்த்துதான் வைத்திருந்தோம். அதனால எல்லா கருவிகளும் நல்லாதான் இயங்கிட்டு இருக்கு. கிட்டத்தட்ட 10 நோயாளிகள் வென்டிலேட்டரில்தான் இருந்தார்கள்.
3 பேருக்கு மாரடைப்பு
7.20 மணியளவில் கரண்ட் வந்தாச்சு. உடனே நார்மல் நிலைமை திரும்பிவிட்டது. 6.20க்கு கரண்ட் போன பின் 7.20-வரைக்கும் 3 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனென்றால் 6.20-க்கு முன்னாடி வென்டிலேட்டரில் இருந்த 3 பேருக்கு மாரடைப்பு வந்துவிட்டது.
ஏற்க முடியாது
அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சமயம்தான் கரண்ட் போய்விட்டது. வென்டிலேட்டர் இல்லாததால் 3 பேர் இறந்தார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா கருவிகளும் நல்லமுறையில் சர்வீஸ் செய்து, பேட்டரி பேக்கப்புகளுடன் வைத்துள்ளோம்.
இயற்கை மரணம்
அந்த பேட்டரி பேக்கப்புகளும் 2 மணி நேரத்துக்கு மேல கரண்ட் இல்லைன்னாலும், சரியாக இயங்க கூடியது. அதனாலதான் நிறைய உயிரிழப்புகளை தடுக்க முடிந்தது. இறந்த 3 பேருக்குமே இயற்கை மரணம்தானே தவிர, கரண்ட் இல்லாததாலோ அல்லது கருவிகள் பழுதாகிவிட்டது என்பதாலோ கிடையாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தவறான தகவல்
இதையடுத்து மற்ற 2 பேர் பலியானார்கள். ஆனால் அவர்கள் விபத்தில் சிக்கியவர்கள். தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தவர்கள். அவர்கள் 9, 10 மணிக்கு மேலதான் அவர்கள் இறந்தார்கள். இது வழக்கமாக விபத்து ஏற்பட்டால் நடக்கக்கூடிய உயிரிழப்புதான். அதனால் 5 பேர் உயிரிழப்பு என்பது தவறானது. 6-20ல் இருந்து 7.20 வரை 3 பேர் உயிரிழந்தனர். அதிலும் 2 பேர் 6.20-க்கு முன்பேயே மாரடைப்பால் இறந்துவிட்டனர்" என்றனர்.
பீலா ராஜேஷ்
அதேபோல, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் மின்சார தடைக்கு முன்னதாகவே மாரடைப்பால் உயிரிழந்தனர்; மின் தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு 3பேரும் உயிரிழக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆஸ்பத்திரி டீனும், தமிழக சுகாதாரத்துறை செயலாளரும் ஒரேமாதிரியான பதிலை சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.