ஒரு கையில் கபசுர குடிநீர்.. மறு கையில் மதுபானம்.. இது சரியா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி
மதுரை: அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு கபசுர குடிநீரையும், மற்றொரு பக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வகையில் மது பாட்டிலையும் வழங்குவது முரணாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று முன்வைத்துள்ளது.
Recommended Video
தமிழக அரசு கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.
ஆனால், மதுபான கடைகளில் உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது.
தமிழக அரசு மனுவில் பிழை? டாஸ்மாக் மூடலுக்கு எதிரான மனுவை விசாரிக்காத உச்சநீதிமன்றம்
டாஸ்மாக் மூடல்
இதனால், சனிக்கிழமை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் பிழை இருந்த காரணத்தால் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மதுரை ஹைகோர்ட் கிளை
இதனிடையே மதுரை பழைய குயவர்பாளையத்தைச் சேர்ந்த பொனிபாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது ஒரு பக்கம் என்றால், கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பரவி வருவது மறுபக்கம். எனவே, சமூக தொற்று ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது சரியான முடிவு இல்லை.
சமூக பரவல்
டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் கொரோனா சமூக பரவல் நிலையை எட்டிவிடும். மது மற்றும் புகையிலையை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் என்பதால், டாஸ்மாக் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழக அரசு வாதம்
இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தது ஹைகோர்ட் கிளை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், ஹைகோர்ட் கிளை எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு தரப்பு வாதம் முன்வைத்தது. அப்போதுதான், உயர்நீதிமன்ற கிளை, இப்படி ஒரு விஷயத்தை குறிப்பிட்டது.