குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு!
மதுரை : டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுபானங்கள் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியல் கொண்ட தகவல் பலகை வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மது வாங்குபவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை தொடர்பான முறையான பதிவேடுகளை கையாள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விலை உயர்வு, தரமில்லாத உணவு பொருட்கள் என அவதிபட்டு வரும் குடிமகன்கள் உயர்நீதிமன்ற உத்தரவால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பொதுநல வழக்கு தாக்கல்
தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் 5,823 மதுபானக் டைகள் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிதி வருவாய்க்கு முதுகெலும்பே டாஸ்மாக் கடைகள்தான். டாஸ்மாக் கடைகள் மூலம் மாதந்தோறும் அரசுக்கு பல கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.
கூடுதல் விலைக்கு விற்பனை
ஆனால் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகவும், ஒழுங்கற்ற முறையிலும் மது விற்பனை செய்யபப்டுகிறது. ஒரு மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுகிறது. மேலும் போலி மதுபானங்களும் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் மதுவுக்கு உரிய விலைபட்டியல் வைக்க வேண்டும். மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
விலைப்பட்டியல் வைக்க வேண்டும்
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஏன்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் முறையான விற்பனை விதிகள் செயல்படுத்துவது கிடையாது. எனவே இனிமேல் டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுபானங்கள் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலைபட்டியல் கொண்ட தகவல் பலகை வைக்க வேண்டும், மது வாங்குபவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை தொடர்பான முறையான பதிவேடுகளை கையாள வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதிமன்றம் கூறும் இந்த உத்தரவுகளை அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் எந்த நேரத்திலும் ஆய்வுகள் நடைபெறலாம். இந்த விதிகளை கடைபிடிக்குமாறு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டரீதியான, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுவது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அடுத்த மாதம் பிப்ரவரி 6-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
குடிமகன்கள் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பல ஆயிரம் கோடி வருமானமும், மற்ற நாட்களில் கோடிக்கணக்கான வருமானமும் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்திற்கு மூலகாரணமாக விளங்கும் குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளில் போதிய வசதிகள் இல்லை. விலை உயர்வு, தரமில்லாத உணவு பொருட்கள் என குடிமகன்கள் அவதிபட்டு வருகின்றனர். தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் குடிமகன்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.