எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் எப்போது அமையும்... மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!
மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் வேண்டும் என்றும் அந்த மனுவில் ரமேஷ் கோரி இருந்தார்.
மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் மதுரையில் தான் அமைக்கப்படும் எனறார். நிர்வாகக் காரணங்களாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறி இருந்தார். முறையாக அனுமதி பெற்ற பின் எய்ம்ஸ் மருத்துவமனையானது கட்டும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறி இருந்தார்.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுவதற்கான அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதற்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பன உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணையானது டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.