மதுரையில் இதயங்களை இணைப்போம் மாநாடு... ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
மதுரை : "இதயங்களை இணைப்போம் இந்தியாவை மீட்போம்" என்ற பெயரில் மதுரையில் 16 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 'இதயங்களை இனைப்போம் இந்தியாவை மீட்போம்' என்ற மாநாடு வருகிற 16 ஆம் தேதி மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினரின் தனித்தன்மை காப்போம், மத்தியிலும் மாநிலத்திலும் மதசார்பற்ற ஆட்சி அமைய ஓரணியில் அனைவரும் அணி வகுப்போம் என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும் கே.எம். காதர் கூறியுள்ளார்.
முன்னதாக, மாநாடு நடைபெறும் நாளில் காலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதுரையில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளதாகவும் பேராசிரியர் கே.எம். காதர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.