மதுரை அழகர் கோயில் வளாகத்தில் ஆடித் திருவிழா தேரோட்டம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
மதுரை அழகர்கோயில் ஆடித் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: கள்ளழகர் அருள்பாலிக்கும் அழகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இதனையடுத்து வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடி மாதம் பத்து நாட்கள் தேரோட்ட பிரம்மோற்சவம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஆடித் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம் என அனைத்து விழாக்களும் பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே எழுந்தருளினார்.
சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகர் இந்த ஆண்டு கோவில் வளாகத்திலேயே தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டில் இருந்தே கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்.. தென் மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு?
இதே போல ஆடி மாதத்தில் நடைபெறும் தேரோட்டமும் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய துணை ஆணையாளருமான அனிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அழகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவானது பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், விழாக்காலங்களில் பெருமாள், தினசரி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி, கோட்டை வாசல் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு கொரோனாவையொட்டி ஆடித்திருவிழாவானது, ஜூலை 20ஆம் தேதி கோயில் வளாகத்தில் வைத்து, பக்தர்கள் இன்றி விழாக்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.