மதுரை மேயர் இந்திராணிக்கு புதிய சிக்கல்! பதவி பறிபோகும் வகையில் அங்கே பறந்த புகார்! பின்னணி என்ன?
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாமலேயே பணி செய்ய வைத்து பொதுவிடத்தில் தீண்டாமை அரங்கேற்றப்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை மேயர் இந்திராணிக்கு எதிராக திமுகவில் உள்ள கோஷ்டிகளே வேலை பார்த்து வரும் சூழலில், அவருக்கு இந்தப் புகார் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்பா.. இரவில் சைக்கிளை எடுத்துக்கிட்டு விரைந்த மேயர் பிரியா! பின்னாடியே போன அதிகாரிகள்.. காரணமே வேற!
மதுரை மேயர்
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் சீனியர்கள் பலர் போட்டி போட்டு முட்டி மோதிய நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசில் அந்தப் பதவியை கைப்பற்றினார் இந்திராணி. இவர் வழக்கறிஞர் பொன்.வசந்தின் மனைவியாவார். பழனிவேல் ராஜன் காலம் தொட்டு பிடிஆர் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதாலும், தீவிர விசுவாசி என்பதாலும் பொன்.வசந்திற்கு ஒரு வாய்ப்பாக அவரது மனைவியை மேயராக்கினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
எதிர் கோஷ்டிகள்
இது எதிர்கோஷ்டிகளான பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. மதுரை மேயர் தேர்வில் முழுக்க முழுக்க பழனிவேல் தியாகராஜனின் கையே ஓங்கியதில் திமுக தலைமையின் கிரீன் சிக்னல் தான் காரணம். இதனிடையே மதுரை மேயராக பொறுப்பேற்றது முதல் இந்திராணியை சுற்றி சர்ச்சைகள் வட்டமடித்து வருகின்றன. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் மேயருக்கு ஆலோசகர் நியமிக்கப்பட்டது இப்போது தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.
புதிய சர்ச்சை
இப்போது அடுத்ததாக ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது மதுரை மாநகராட்சி 59-வது வார்டுக்குட்பட்ட ரயில்வே காலனியில் தூய்மைப் பணிகளை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார். அப்போது மேயர் முன்னிலையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாமலேயே தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் மதுரையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வு நடந்தது.
வழக்கறிஞர் புகார்
இதனிடையே இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ள வழக்கறிஞர் முத்துக்குமார், ''மதுரை மேயர் இந்திராணி ஆய்வு மேற்கொண்ட போது, பட்டியலினத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை உட்பட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாமல் பணி செய்ய வைத்திருகிறார்கள். இது வன்கொடுமை குற்றத்திற்கு சமமானது. மனித மாண்புக்கு எதிரான செயல் இது. மனித கழிவுகளை மனிதனே அக்கற்ற விதிக்கப்பட்ட தடைச்சட்டம் உட்பட எதையும் பின்பற்றவில்லை.''
மேயர் தரப்பு
''இதனால் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு சம்மன் அனுப்பி அழைத்து ஆனையம் விசாரணை நடத்த வேண்டும்.'' இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தின் பின்னணியில் திமுகவில் உள்ள எதிர்க்கோஷ்டியினர் சிலரே உள்ளதாக சந்தேகிக்கும் மேயர் தரப்பு அது தொடர்பான புகாரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாம்.