வாடிவாசலில் தமிழர் மரபுபடி திருமணம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த காதல் ஜோடியின் விருப்பம்!
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று வாடிவாசல் முன்பு திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்த காதலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர்.
Recommended Video
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (28), தற்சார்பு வாழ்வியல் பயணி என்ற சமூகஆர்வலர் வித்தியாதரணி (31) ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கலந்து கொண்டனர்.
அப்போது இருவரும் சந்தித்து கொண்டு பின்னர் நண்பர்களாக பழகி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரு வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ள விரும்பிய இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் மணமுடிக்க முடிவு செய்தனர்.
திருமண உறுதி ஏற்பு நிகழ்ச்சி
இதனால் தாங்கள் சந்தித்த நாளான அன்றைய தேதியிலேயேயும், குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது வாடிவாசலில் முன்பு வைத்து திருமண உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்.
அணிகலன்கள்
இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஆடம்பரத்தை துறந்து தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கதர் ஆடைகளை மட்டுமே அணிகிறார்கள். இவர்களிடம் 4 ஜோடி கதர் ஆடைகள் மட்டுமே உள்ளன. தங்க ஆபரணங்களை அணியாமல் எளிய ஐம்பொன்னாலான அணிகலன்களை மட்டுமே அணிகிறார்கள்.
திருமணம் செய்ய
மனு கொடுக்க வந்த காதலர்கள் கூறுகையில் திருமணம் என்றாலே ஆடம்பரம் என்றாகிவிட்டது. அது பெற்றோருக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கக் கூடியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் நாங்கள் எளிய முறையில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். இயற்கையை பாதுகாக்கும் வகையில் பனை ஓலையால் செய்யப்பட்ட மாலைகளை அணியவுள்ளோம்.
பழங்களே விருந்து
ஐம்பொன்னாலான மோதிரத்தையே மாற்றிக் கொள்ளவுள்ளோம். திருமண விருந்திலும் பழங்கள் வேக வைக்காமல் உண்ணும் காய்கறிகளையே பயன்படுத்தவுள்ளோம். உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கனவு நிறைவேறுமா என ஏக்கத்துடன் உள்ளனர்.