மதுரை.. அவசர திருமணத்தால் வந்த வினை.. கூடுதல் வரதட்சிணை கேட்டு மனைவிக்கு தீ வைத்த கணவன்!
மதுரை.. அவசர திருமணத்தால் வந்த வினை.. கூடுதல் வரதட்சிணை கேட்டு மனைவிக்கு தீ வைத்த கணவன்!
மதுரை: மதுரையில் கொரோனா காலத்தில் நடைபெற்ற அவசர திருமணத்தால் கூடுதல் வரதட்சிணை கேட்டு திருமணமான 4 மாதத்தில் மனைவியை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிசுரேஷ் என்பவருக்கு கருப்பாயூரணி அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் ஜெயக்குமார் என்பவரின் மகளான கற்பகவள்ளி என்ற பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மதிச்சியம் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு எதிரொலியாக பணிக்கு செல்லாத கணவர் ஹரி சுரேஷ் தினசரி மதுஅருந்திவிட்டு மனைவி கற்பகவள்ளியை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதோடு , தினசரி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இது எங்க ஏரியா.. உள்ளே வராதே.. நாங்களும் சொல்வோம்ல.. குரங்குகளுக்கு ஏரியா பிரச்சினை உண்டு போல!
ஏற்கனவே திருமணத்தின் போது வரதட்சணை பெற்ற பணத்தை அனைத்தையும் செலவு செய்து, தங்க நகைகளை அடகுவைத்துவிட்ட நிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நேற்றையதினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரி சுரேஷ் தனது மனைவி கற்பகவள்ளியை அடித்து உதைத்துள்ளார்.
அப்போது தனது தந்தையை வர சொல்லி சமாதானம் பேசுவதாக மனைவி கூறியதை அடுத்து அவரை ஆபாச வார்த்தைகளால் பேசி அருகில் கேனில் இருந்த மண்ணெண்ணெயை கற்பகவள்ளி மீது ஊற்றினார். உடனே கற்பகவள்ளி தப்பியோட முயன்ற போது வீட்டுக் கதவை அடைத்து நெருப்பை பற்ற வைத்துவிட்டார்.
தீப்பற்றியதோடு அலறியடித்து ஓடிவந்த கற்பகவள்ளியை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீக்காயம் ஏற்பட்ட கற்பகவள்ளியை உயிருக்கு போரடி வருகிறார். இதையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஹரி சுரேஷை மதிச்சியம் காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சிணைக்கான தண்டனை 10ஆண்டுகளாக உயர்த்தி பேரவையில் சட்டம் நிறைவேற்றபட்ட நிலையில் கூடுதல் வரதட்சிணைக்காக திருமணமான 4மாதங்களில் மனைவியை எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலை காரணமாக வைத்து நடத்தப்பட்ட அவசர திருமணத்தால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.