தேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினார் போலி மருத்துவ மாணவர்!
போலி மருத்துவ சான்றிதழ் தந்து படித்த மாணவர் ரியாஸ் கைது செய்யப்பட்டார்
Recommended Video
மதுரை: தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்த மருத்துவ மாணவர் ஏற்படுத்திய அதிர்ச்சியைத் தொடர்ந்து தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இணைந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை கிடுக்குப்பிடியாக நீட் தேர்வு நடத்தியும் அத்தனை பேரின் கண்களிலும் மிளகாய்ப் பொடி தூவி கிரிமினல்தனமாக செயல்பட்டுள்ளார் உதித் சூர்யா.
உதித் சூர்யா விவகாரத்தில் எத்தனை எத்தனை பேருக்கு தொடர்பு என்று தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மதுரையில், போலி மருத்துவ அனுமதி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து சிக்கியுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர்.
அந்த மாணவர் கொடுத்த சேர்க்கை சான்றிதழ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை தல்லாகுளம் போலீஸில் கல்லூரி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. போலீஸார் ரியாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியைச் சேர்ந்த கும்பல் ஒன்றுதான் இந்த போலியான மருத்துவ அனுமதி சான்றிதழை விநியோகித்துள்ளது. ஒரு சான்றிதழுக்கு ரூ. 60 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 60 மாணவர்கள் வரை ஏமாந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
விக்ரம் சிங் என்ற நபரிடமிருந்து இந்த போலி சான்றிதழை வாங்கியுள்ளார் ரியாஸ். மோசடிக் கும்பல் டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்து போலி சான்றிதழை விநியோகித்துள்ளது. இந்த கும்பலுக்கும் தேனியில் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.