மதுரை மேலவளவு 7 பேர் படுகொலை.. 13 ஆயுள் கைதிகளை விடுவித்தது எப்படி.. ஹைகோர்ட் கடும் அதிருப்தி
மதுரை: மதுரை மேலவளவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தலைவரானதை அப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினர் எதிர்த்து வந்தனர்.
இந் நிலையில் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு பஸ்சில் வைத்து மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
23 பேர் விடுதலை
இந்த படுகொலைகள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது முதலில் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சாட்சிகளுக்கு மிரட்டல் வந்ததால் அந்த வழக்கு சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சிலர் மட்டும் விடுதலை
இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரினார்,
அரசாணை வெளியீடு
இதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, கடந்த 9-ம் தேதி மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்
விடுதலை எப்படி
இந்நிலையில், 13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ``வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில் 13 பேரையும் விடுதலை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது அந்த அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்து இருந்தார்.
சரமாரி கேள்வி
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேர் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 13 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றம் விதித்த தண்டனை காலத்தை தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்தது கண்டனத்துக்கு உரியது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.