ஜோசியம் படுத்தும்பாடு.. ஒன்றல்ல, இரண்டல்ல 450 பசுக்களை வாங்கியதால் கடன்.. அப்ஸ்காண்டாகிய மெஸ் ஓனர்!
மதுரை: மதுரையில் ஜோசியர் ஒருவரின் பேச்சை கேட்டு 450 பசுமாடுகளை வாங்கிய மெஸ் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
மதுரையில் பிரபல ஹோட்டல்களில் ஒன்று ரமணாஸ் மெஸ். இந்த மெஸ்ஸிற்கு 3 கிளைகள் உண்டு. இதன் உரிமையாளர் செந்தில். இவருக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை இருந்ததாம்.
தனது தொழிலை மேலும் மேம்படுத்த மாடுகளை அதிக அளவில் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என ஜோதிடர், செந்திலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய செந்தில் 450 மாடுகளை வாங்கி ஒரு பண்ணையே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மாட்டை பராமரிக்கவும் தீவனத்துக்காகவும் பெரும் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க கோபால் என்ற நபரிடம் 5 கோடியை செந்தில் கடனாக பெற்றுக் கொண்டார். மேலும் அந்த நபரை மெஸ்ஸில் பங்குதாரராகவும் சேர்த்து கொண்டாராம்.
இந்த நிலையில் கடனை அடைக்காத செந்தில், கோபாலிடம் வாங்கிய 5 கோடி பணத்தையும் சுருட்டி கொண்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக கோபால் புகார் அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தன்னிடம் பணியாற்றி வந்த 120 ஊழியர்களின் தலா ரூ 2 லட்சம் வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனையும் திருப்பிச் செலுத்தாமல் செந்தில் தலைமறைவாகிவிட்டதாக அந்த ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாயமாகியுள்ள செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.