சஹானாவை தேடி.. மீனாட்சிபுரத்துக்கு சென்ற சு.வெங்கடேசன்.. டக்குனு கேட்ட கோரிக்கையை நிறைவேற்றி ஹேப்பி!
Recommended Video
மதுரை: "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் 5ம் வகுப்புதான் படிக்கிறேன்.. ஆனா எங்க ஊர் அக்காங்க நிறைய பேர் நடந்தே 7 கிமீ ஸ்கூலுக்கு போய் வராங்க.. அப்படி திரும்பி வரும்போது, பிராந்தி கடையெல்லாம் இருக்கு.. அவங்க திரும்பி வர்ற வரைக்கும் வீட்ல பயந்துட்டே இருக்காங்க.. அதனால ஸ்கூலுக்கு போய்வர எங்களுக்கு பஸ் வசதி வேணும்" என்று சஹானா கேட்ட கேள்விதான் மதுரை எம்பி வெங்கடேசனை நேரடியாக சஹானா ஸ்கூலுக்கே வரவழைத்துவிட்டடது!
கிராம சபை கூட்டம் என்பது வலுப்பெற்ற ஒரு அமைப்பு.. கடந்த சில காலங்களில் தொய்வாக இருந்த கிராமசபை கூட்டம் இப்போது வீறு கொண்டு எழுந்து வருகிறது... சாங்கியமாக நடத்தப்பட்ட கூட்டம் இன்று கட்டாயமாக நடத்தப்பட்டு, மக்களிடம் நெருங்கி வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் ஒரு தீர்மானம் போட்டுவிட்டால் அதை எந்த சட்டத்தினாலும் எதுவும் செய்ய முடியாது.. அந்த அளவுக்கு ஸ்ட்டிராங் ஆனது... மக்கள் இதன் மகத்துவத்தையும் புரிந்து கொண்டு வருவதால், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை தட்டிக்கழிக்காமல் செய்ய முடிகிறது!
5ம் வகுப்பு மாணவி
இந்நிலையில், மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் ஒரு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.. இந்த கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும்தான் இருக்கு.. ஆனால் உயர்நிலை பள்ளி இல்லை.. 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்கூலுக்கு போய்தான் மாணவர்கள் படிக்க வேண்டி இருக்கு... அதுவும் நடந்துதான் போகிறோம்.. பஸ் வசதி இல்லை.
நடந்து போறாங்க
ஊருக்கு 2 முறைதான் பஸ் வருது. ஆனால் ஸ்கூல் டைமுக்கு வர்றது இல்லை. 7 கிமீ நடந்து போறதால, நேரத்துக்கும் ஸ்கூலுக்கு போக முடியறது இல்லை.. எங்க ஊர் அக்காங்க ரொம்ப கஷ்டப்படறாங்க...பஸ் வசதி செய்து தந்தால் நல்லா இருக்கும்.. எனக்கு பிரச்சனை இல்லை.. ஆனா அக்காங்க 7 கிமீ தூரம் நடந்தே போய் வர்றாங்க.. திரும்பி வர்ற வழியில் பிராந்தி கடை இருக்கு.. அதனாலதான் பஸ் வசதி வேணும்" என்றார்.
கிராம சபை
கிராம சபை கூட்டமே சஹானாவை ஆச்சரியமாக பார்த்தது.. ஏனென்றால், பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பெரியவர்களே வாய் திறந்து கோரிக்கை வைக்க தயங்கும்போது, குட்டிப்பெண்.. அதுவும் எல்லோர் முன்னிலையிலும் பேசியது பாராட்டை பெற்றது.. இந்த பேச்சு சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. இந்த வீடியோவை மதுரை எம்பி சு.வெங்கடேசனின் பார்வைக்கும் போனது. அப்படியே மெய் சிலிர்த்துவிட்டார்!!
எம்பி வெங்கடேசன்
உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், வெங்கடேசன் பேசினார்.. சஹானாவின் கோரிக்கை குறித்து விவாதித்தார்... பிறகென்ன.. சஹானா கேட்டபடி பஸ் வசதி வரப்போவது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை சொல்வதற்காக வெங்கடேசன் நேரடியாக சஹானாவை தேடி ஸ்கூலுக்கு வந்துவிட்டார். மீனாட்சிபுரத்தில் தான் சஹானா படிக்கும் பள்ளி உள்ளது... கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தவர் அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார்.
ஆனந்த கண்ணீர்
"என்ன படிக்கிறீங்க எல்லாரும்.. நல்லா படிக்கணும்.. நீங்க நிறைய கேள்விகளை கேட்கணும்... படிக்கக்கூடிய வசதிகளை தயங்காமல் எதுவானாலும் கேட்கணும்.. சொன்னாதானே யாராவது செய்ய முன்வருவாங்க.. அதனால் தைரியமா சஹானா மாதிரி கேள்வி கேட்க முன் வரணும், சரியா" என்றவர்.. சஹானாவை அழைத்து பேசினார்.. "நல்லா பேசினே..ம்மா" என்று பாராட்டி ஒரு பரிசையும் தந்தார். அந்த பரிசை பெறும்போது சஹானா கண்ணில் மகிழ்ச்சி நீர் வழிந்தபடியே இருந்தது!