நம்பிக்கை மனிதர்கள் வரிசையில் பூரண சுந்தரி... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொலைபேசி மூலம் பாராட்டு
மதுரை: இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மதுரையை சேர்ந்த பார்வை குறைபாடுடைய பூரண சுந்தரிக்கு மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை மனிதர்களின் வரிசையில் பூரண சுந்தரியும் இணைந்துள்ளதாகவும், அந்தப் பெண்ணை தளராது ஊக்குவித்த அவரது பெற்றோரை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி
மாற்றுத்திறனாளி
''இந்திய ஆட்சிப் பணித் தேர்வின் முடிவுகள்(2019) வெளியாகியுள்ளன. இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி என்ற தம்பதியினரின் மகளான பூரண சுந்தரி தேர்வு பெற்றுள்ளார். இவர் 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.
வாழ்த்துகிறேன்
உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்பிக்கும் மனிதர்களின் வரிசையில் பூரணசுந்தரியும் இணைந்துள்ளார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.அவரின் முயற்சிக்குப்பின்னே அவரது மொத்த குடும்பமும் உள்ளது. அவரை தளராது ஊக்குவித்த அந்த பெற்றோர்களை வணங்குகிறேன்.
தொலைபேசியில் பேச்சு
தொலைபேசியில் வாழ்த்துச்சொல்ல பூரணசுந்தரியின் தந்தையை அழைத்தேன். அழைப்பை எடுத்த நிமிடத்திலிருந்து எனது நாவல்களை அந்த குடும்பம் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறது என்று இடைவிடாமல் சொல்லிமுடித்தார்கள். "தந்தையை வாசிக்கச்சொல்லி காவல்கோட்டம் முழுமையும் அறிந்துகொண்டேன்" என்று பெரும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் பூரண சுந்தரி.
வெங்கடேசன் வாழ்த்து
வரலாறு வாசிக்கமட்டுமல்ல..வரலாற்றை உருவாக்கவும் முடியும்''. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. பூரண சுந்தரிக்கு வாழ்த்துக் கூறி அவருடன் உரையாடியதைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.