தமிழ்நாடு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள்.. அஞ்சல் தேர்வு படிவத்தில் குளறுபடி.. சு.வெங்கடேசன் கண்டனம்
அஞ்சல் துறை தேர்வுக்கான விண்ணப்பத்தில் குளறுபடியை சரி செய்யக் கோரி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை: அஞ்சல் துறை தேர்வுக்கு தமிழ்நாடு தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாத வகையில் உள்ள விண்ணப்ப படிவத்தை மாற்ற கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள சு.வெங்கடேசன், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் 40 ஆயிரம் கிராகின் டாக் சேவக் காலியிடங்களுக்கான பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலியிடங்கள் உள்ளன.
இந்த நியமனங்கள் அனைத்தும் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போல்... அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகத்தில் தனியார் விளம்பரங்கள் - இனிமே இப்டிதான்
அஞ்சல் துறை தேர்வு
அந்த விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டுள்ளது. அதில் மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் உள்ளன. ஆனால் விண்ணப்பத்தில் 6வது பாடமும் இடம்பெற்றுள்ளது. அது தெரிவு மொழி ஆகும். இது மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், இருமொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் இல்லை. இதனால் தமிழ்நாடு தேர்வர்கள் 6வது பாட விவரங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது.
சு.வெங்கடேசன் கடிதம்
இதனால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ்நாடு தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேர்வு படிவத்தை மாற்ற அஞ்சல் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மத்திய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது.
தமிழ்நாடு தேர்வர்கள் பாதிப்பு
ஜனவரி 27ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும், கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறையில் 10ம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தெரிவு மொழி நடைமுறை இல்லாததால், அஞ்சல் துறை விண்ணப்பத்தை தமிழ்நாடு தேர்வர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
அலட்சியம்
இந்தியா முழுவதும் தேர்வுகளை நடத்தும் போது மாநிலங்களில் உள்ள பிரத்யேக சூழல்களை கணக்கில் கொள்ளப்படாதது, குறிப்பாக மொழி குறித்த அணுகுமுறையில் காட்டப்படும் அலட்சியம் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. எத்தனை துறைகளில் எத்தனை நியமனங்களில் தமிழ்நாடு தேர்வர்கள் இத்தகைய பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள் என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
கால நீட்டிப்பு தேவை
ஜனவரி 27ம் தேதி விண்ணப்ப தேர்தி தொடங்கி 9 நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் கடைசி தேதியான பிப்.16க்கு 10 நாட்களே உள்ளன. இதற்கு இன்னும் தீர்வு இல்லை. இதுகுறித்து அஞ்சல் துறை செயலாளர் வினீத் பாண்டே மற்றும் தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6வது பாட விவரம் கட்டாயமாக கேட்கப்படுவது மாற்றப்பட வேண்டும். 9 நாட்கள் வீணாகி இருப்பதால், விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்.17 முதல் பிப்.19 வரை தரப்பட்டுள்ள காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.