அமர் ஜவான் ஜோதி சின்னத்தை சிதைப்பது வரலாற்று குரூரம்.. ட்விட்டரில் கொந்தளித்த சு.வெங்கடேசன்
மதுரை: அமர் ஜவான் ஜோதி சின்னத்தை சிதைப்பது வரலாற்று குரூரம் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி எனும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இதேபோன்று இந்திய சுதந்திரத்திற்கு பின் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போது வரை நடைபெற்ற போர்களில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.
இந்த போர் நினைவுச்சின்னத்தில் 1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டு அங்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்புத்துறை, இராணுவ அதிகாரிகள், மரியாதை செய்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமர் ஜவான் நினைவிட ஜோதியானது, ராணுவ மரியாதையுடன் தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குகளுடன் நேற்று இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்,அமர் ஜவான் ஜோதி மனிதமே தேசத்தை ஒன்றாக வைத்திருக்க முடியும் என்ற வரலாற்று வெளிச்சம் எனவும்,பொன் விழா காணும் வங்க தேச உருவாக்கத்தில் உயிர் ஈந்த 3483 தியாகிகளின் தீரத்தின் பின்புலத்தில் நிறுவப்பட்ட சின்னத்தை சிதைப்பது வரலாற்றுக் குரூரம் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.