கோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு
மதுரை: புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 8 மணி அளவில் துவங்கியது. இந்த போட்டி நடைபெறும் முன்பு டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மதுரை அருகே பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. வாடிவாசலில் திறக்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஏராளமான வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த போட்டியை காண அமைக்கப்பட்டு இருந்த கேலரியில் ஏராளமான மக்கள், பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளித்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியர் வினய், தென்மண்டல காவல்துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட எஸ்பி மணிவண்ணன், தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாலமேடு வாடிவாசல் பின்புறம் கால்நடைகளுக்கான இறுதி மருத்துவ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை முழு உடல் தகுதி பெற்றுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கால்நடைதுறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தெரிவித்தார். மேலும் காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அது மழுங்கடிக்கப்படும் என்றார்.
இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி நடந்தது. இதையடுத்து அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போட்டி தொடங்கும் முன்பு போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.