சாமி கும்பிடுவதா இல்லை.. ஓட்டுப் போடுவதா.. என்னய்யா நீங்க.. மதுரை மக்கள் குமுறல்!
Recommended Video
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலை கொண்டு போய் சித்திரைத் திருவிழாவுக்கு நடுவில் வைத்திருப்பதால் மதுரை மக்கள் செம டென்ஷனாக காணப்படுகின்றனர். நாங்க சாமி கும்பிடுவதா இல்லை ஓட்டுப் போடுவதா என்று அவர்கள் கேட்கிறார்கள்.
பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவு பெறும் நிலையில், மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது எனவும் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கோவில் நகரம் என்ற புகழோடு திகழும் மதுரையின் முக்கிய திருவிழாவாக இருப்பது சித்திரைத் திருவிழா. இந்த திருவிழாவானது ஹிரியும் சிவனும் ஒன்று என்பதை நினைவுறுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சித் திருக்கல்யாணம், சொக்கநாதர் திருத்தேர், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகையாற்றில் எழுந்தருளுதல் என வரிசையாக மதுரை திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
பார்றா ... கிராமத்து கதைன்னு சொல்லிட்டு... பாரம்பரியத்தை அசைச்சு பார்க்கறாங்க!
சாமி தரிசனம்
இந்த திருவிழாவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமாநாதபுரம் என அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவின் உச்ச நாளாக கருதப்படுவது ஏப்ரல் 17 ஆம் தேதி கள்ளழகர் புறப்பாடு முதல் வைகையாற்றில் எழுந்தருளும் வரையிலான 19 ஆம் தேதி இரவு வரை ஆகும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
இந்த தேதிகளில் ஆயிரக்கணக்கான நீர்மோர் பந்தல், இலவச விசிறி வழங்குதல், சாமி பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான அன்னதான வகைகள் நடைபெறும். இதில் வருடந்தோறும் அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அதே ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மக்கள் குழப்பம்
தேர்தல் தேதியும் திருவிழா தேதியும் ஒரே நாளில் வருவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவில் சிரமம் ஏற்படும் எனவும் வாக்கு சதவீதம் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. குறிப்பாக திருவிழா நடக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும், அதன் வாக்காளர்களும் வாக்குப் பதிவு செய்வதில் ஏணைய இன்னல்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
வாக்குப் பதிவில் சரிவு
அதேபோல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய திருவிழாவான இத்திருவிழாவுக்கு வாக்காளர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதால் வாக்குப் பதிவில் பெரிதளவு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிகிறது. 2007 இல் 77.48 சதவீதமாக இருந்த மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்குப்பதிவு, 2014 இல் 67.88 சதவீதமாக குறைந்தது.
தேதியை மாத்துங்க
இந்நிலையில் இதே திருவிழா தேதியில் வாக்குப் பதிவு நடத்தினால் பெரிதளவு வாக்கு வங்கிகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது