மதுரை பெரியார் நிலையம் வேண்டாம்.. மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் : பாஜக தீர்மானம்!
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சி அம்மன் பேருந்து நிலையம் என மாற்ற வேண்டும் என பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவும், கோரிப்பாளயத்தை அழகர் பாளையம் என்று மாற்றவும் வலியுறுத்தி மதுரை பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரைச் சூட்ட பாஜக மதுரை மாவட்ட செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மதுரையின் மையப் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பேருந்து நிலையம் 1971ஆம் ஆண்டு முதல் பெரியார் பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
போலீசாரை விமர்சித்து கோஷம்.. உங்க கூட்டணி கட்சி மீது ஆக்ஷன் எடுங்க! முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை!
பாஜக செயற்குழு
பாஜக மாநில செயற்குழு கூட்டம் அண்மையில் கடலூரில் நடைபெற்ற நிலையில், மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் அண்ணாநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்தும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோரிபாளையம் - அழகர் பாளையம்
மேலும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்றும், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரையும் வைக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கோரிப்பாளையத்தின் பெயரை அழகர் பாளையம் என்று பெயர் மாற்றி வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாய்பாய்க்கு சிலை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச் சாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரதமர் படத்துடன் கூடிய கல்வெட்டை வைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுவழியை ஆக்கிரமித்துள்ள துணை மேயரை கண்டித்தும், மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாட்டுத்தாவணி
கடந்த 2017ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அதிமுக ஆட்சியில் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெரியார் பெயர்
மதுரை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இந்த பேருந்து நிலையம் 1971ஆம் ஆண்டு முதல் பெரியார் பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தந்தை பெரியாருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வரும் பாஜக, அவரது பெயரை மாற்றவேண்டும் என தற்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.