மதுரை லாக்டவுன்: அத்துமீறி வாகனங்களில் வலம் வந்தால் பறிமுதல்- 10 சிறப்பு பறக்கும் படை தீவிரம்
மதுரை: கொரோனா பரவுவதைத் தடுக்க மதுரையில் 7 நாட்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. லாக்டவுன் காலத்தில் வாகனங்களில் வலம் வந்தால் அவற்றை பறிமுதல் செய்ய 10 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
கொரானா பரவுதலை தடுக்கும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரையிலும் இன்று முதல் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.
7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை- மாவட்ட எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம்
நடமாட்டமே இல்லை
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை, கீழமாசிவீதி, விளக்குத்தூண், கோரிப்பாளையம், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான பேருந்து நிலையங்களான ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட்டுவிட்டன.
சிறப்பு படைகள்
மேலும் பொதுமக்கள் வெளியே வருவதை கண்காணிக்கும் வகையில் சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகரின் முக்கிய பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வாகனங்கள் பறிமுதல் எச்சரிக்கை
வாகனங்களில் தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் அவர்களை கண்காணித்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். லாக்டவுனை மீறி வாகனங்களில் வெளியே வந்தால் அவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்களுக்கு அட்வைஸ்
மேலும் மதுரை மாநகரில் உள்ள 20 காவல் நிலைய சரகங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், அனைத்தையும் தங்களது காவல் நிலைய சரகத்தின் எல்கைக்குள் உள்ள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளவும். மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.