மதுரை மருத்துவரின் சித்த மருந்தில் கொரோனா கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருக்கு.. அரசு தகவல்
மதுரை: மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனாவை தடுப்பதற்காக கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்துள்ளார்.
அவர் தான் தாயரித்த இம்போரோ சித்த மருந்து பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து குணம் அடைய முடியும் என்றும். இந்த சித்த மருந்தான மூலிகை பொடியை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
அவசரமாக ஒரு மருந்து தேவைப்பட்டது... சொந்த அனுபவத்தை பகிரும் பொன்.ராதாகிருஷ்ணன்
அரசுக்கு கேள்வி
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சித்த மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என கடந்த வாரம் கேள்வி எழுப்பினர்.
இயற்கை மருத்துவம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக்குழு முன்பு மனுதாரர் ஜூன் 26ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், ஆங்கில மருத்துவ லாபி இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என அச்சம் ஏற்படுவதாக கவலை தெரிவித்தனர்.
விளக்கம் அளித்தார்
இதனிடையே தமிழக அரசு அமைத்த மருத்துவ நிபுணர் குழு முன்பு டாக்டர் சுப்பிரமணியன் ஆஜரானார். தான் தயாரித்த மருந்து குறித்த அனைத்து விபரங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கிறார். இந்நிலையில் இவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மருத்துவ குழுவினர் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தகவல்
அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் தயாரித்துள்ள மருந்தில் கலக்கப்பட்டுள்ள சேர்க்கையின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்தபோது அதில் கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது மேல் நடவடிக்கைக்காக இம்ப்ரோ மருந்து மத்திய ஆயுர்வேதம் சித்த ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தார்கள்.