பெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்!
மதுரை: பெட்ரோல், டீசல் இல்லாமல் பெடலை சுற்றினாலே ஓடும் பேட்டரி காரை திருமங்கலத்தைச் சேர்ந்த இன்ஜினிரியங் மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இதை தயாரிக்க ஆன செலவும் மிக குறைவு என்கிறார் மாணவர் சிவபாண்டி.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. திருமங்கலம் பேருந்து நிலையத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவபாண்டி (21). மதுரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
சிவபாண்டிக்கு புதிய கண்டுபிடிப்புகள் மீது தீரான ஆர்வம் இருந்ததால் அவர் ஆட்டோமொபைல் படிப்பை விரும்பி தேர்ந்தெடுத்தார். தனது நண்பர்களான அஜித், முகமது காதர் மற்றும் சுந்தரபாண்டியுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான புதிய வகை பெடலிங்குடன் கூடிய பேட்டரி காரை தயாரித்துள்ளார்.
புதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'
எப்படி இயங்குகிறது
சைக்கிள் போல் பெடலை சுற்றினால் அதன்மூலமாக மின்சாரம் கிடைத்து காரில் பொருத்தியுள்ள சிறிய ரக பேட்டரி மூலமாக கார் ஓடத் தொடங்குகிறது. மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லலாம். முழு சார்ஜில் பேட்டரி இருக்கும்போது 37 கிமீ வரை செல்ல முடியும். 400 கிலோ வரை ஏற்றிச் செல்லும் வகையில் சிவபாண்டி காரை வடிவமைத்துள்ளார்.
பேட்டரி வாகனம்
இது தொடர்பாக மாணவர் சிவபாண்டி கூறுகையில், சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுவதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் ஓசோன் படலத்தில ஓட்டை விழுந்துள்ளது. அரசே தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பேட்டரி வாகனங்களை இயக்க வலியுறுத்தி வருகிறது. எனவே நான் சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனத்தை உருவாக்க விரும்பினேன். அதன்படி பெடலிங் வகையிலான காரை கண்டுபிடித்துள்ளேன்.
செலவு மிக குறைவு
இந்த காரில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். பிரேக் , கியர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், சாதாரண காரில் இருப்பது போல் தான் உள்ளது. இதனை தயாரித்து இயக்க எனக்கு ரூ80 ஆயிரம் மட்டுமே செலவானது.. இந்த காரில் நானும் என் குடும்பத்தினரும் பயணித்து வருகிறோம். முழு அளவில் பேட்டரி சார்ஜ் இருந்தால் 37 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து செல்ல முடியும். பெட்ரோல் டீசல் போட வேண்டிய அவசியம் இல்லை. பேட்டரி சார்ஜிங் முறை உள்ளது.பெடலிங் செய்து காலால் சுற்றினால் அதன் உந்து சக்தியில் மின்சாரம் கிடைத்து வாகனம் இயங்கும். அத்துடன் இந்த உந்து சக்தியால் மின்சாரம் சேமிக்கும் வசதியும் உள்ளது" என்றார்.
வெளியில் வர வேண்டும்
புதுமையான பல கண்டுபிடிப்புகளை நமது மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்பு வெளியில் தெரிந்து ஊக்கம் பெற்றால் இதேபோல் பலரும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள் என்பதே நிதர்சனம். அரசின் பார்வைக்கு மாணவர்கள் கண்டுபிடிப்புகள் போய் சேர்ந்து அவர்களுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.