மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை சுட்டு தரோம்.. கைலாசாவில் இடம் கேட்டவர் மீது புகார்!
மதுரை: கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதிக் கோரி நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியதாக மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் எழுந்துள்ளது.
சுவாமி நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இங்கு தனிக் கொடி, தனி பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாக்கிய அவர் தனி கரன்சியையும் உருவாக்கியுள்ளார்.
அந்த நாட்டிற்கான கரன்சியை விநாயகர் சதுர்த்தி அன்று அவர் வெளியிட்டார். அதன்படி அவர் கைலாசா நாட்டிற்கான பொற்காசுகளை வெளியிட்டார். தொடர்ந்து 56 இந்து நாடுகளோடு மட்டுமே பொருளாதார ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
"காவியில் களங்கம்?".. சர்ச்சையை கிளப்பிய எஸ்.வி. சேகர்.. சென்னை கமிஷனர் ஆபீசில் விசாரணைக்காக ஆஜர்
கைலாசா பிரதமர்
மேலும் அவர் 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையையும் வெளியிட்டுள்ளார். கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் வங்கியையும் அவர் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் பாஸ்போர்ட் வெளியிட்ட போதே அந்த தீவில் குடியேற விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்திருந்தார் நித்யானந்தா. மேலும் தன்னை அந்நாட்டின் பிரதமராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
கைலாசாவில் ஹோட்டல்
இந்நிலையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் நிறுவனரின் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். நித்யானந்தா பக்தர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வதை போல கைலாசா மக்களை ஈர்க்கும் வகையில் மாஸ்க் புரோட்டா , கொரோனா தோசை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கைலாசா
இந்த கடிதத்தில் முகவரி குறிப்பிடாத நிலையில் செய்தியாளர்கள் மூலமாக எப்படி கைலாசா நாடுகளின் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறதோ அதேபோல் இந்த கடிதமும் சென்றடையும் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நித்யானந்தாவும் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேச விரோதம்
இந்த நிலையில் இந்திய அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக குமார் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை, ஆனியன் போண்டா ஆகியவற்றை போட்டு அசத்திய இந்த ஹோட்டல், தற்போது இப்படி ஒரு புகாரில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.