12 ஆண்டுகளுக்குப் பின் தேனி- மதுரை ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
மதுரை: 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தேனி- மதுரை இடையே ரயில் சேவை இயக்கப்படுவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த ரயில்சேவையை வரும் 26-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மே 27-ந் தேதி முதல் மதுரை- தேனி ரயில் சேவை இயங்கும்.
Recommended Video
ஆங்கிலேயர் ஆட்சியில் 1928-ம் ஆண்டு போடி-மதுரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி என அப்பகுதிகளை ஊடறுத்து இந்த ரயில் சேவை இயக்கப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரக் கூடியதாகவும் இருந்தது.
நீண்டகாலமாக மீட்டர் கேஜ் ரயில் பாதையில் போடி- மதுரை ரயில்கள் இயக்கப்பட்டன. இதனையடுத்து 2010-ல் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக மதுரை- போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் கடந்த 12 ஆண்டுகளாக மதுரை- போடி ரயில் சேவை இயக்கப்படவில்லை. அது அப்பகுதி மக்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
மதுரை- போடி ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் மதுரை- தேனி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முழுமையடைந்துவிட்டது. இதனால் முதல் கட்டமாக மதுரை- தேனி இடையே ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
தேனி மாவட்ட தி.மு.கவில் உட்கட்சி குழப்பம்.. முடிவுகள் நிறுத்தம்- தலைமை வரை போன புகார்.. காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக மதுரை லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், மிகக்குறுகிய தூரத்தை மிக அதிக காலம் எடுத்துக் கொண்ட திட்டம் . மதுரை தேனி பயணிகள் ரயில் வரும் 27 ஆம் தேதி முதல் இயங்கத் துவங்குகிறது.பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் இவ்வாண்டு தென்மேற்கு பருவக்காற்றோடு தேனிக்கு வந்து சேர்கிறது மதுரை ரயில் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக போடி - மதுரை, திண்டுக்கல் - லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழுவினர் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அக்குழுத்தலைவரும், பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ.வு.மான ஏ.லாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில் சேவை இல்லாத மாவட்டமாக திகழ்ந்த தேனி மாவட்டத்தில் போடி - மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென கடந்த 10ஆண்டுகளாக போராடினோம். அதன் வெற்றியாக வரும் மே 26ஆம் தேதி தேனி - மதுரை வரை ரயில் இயக்கப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் போராட்டக்குழு நன்றி தெரிவிக்கிறது.
அதே நேரம் மீதமுள்ள தேனியில் இருந்து போடி வரையிலான திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மதுரை வரை இயக்கப்படும் ரயில் சேவையை தேனி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், சென்னை, ராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டை வரையில் நீட்டிக்க வேண்டும். போடி - மதுரை அகல இரயில் பாதை திட்டம் துவங்கிய பின் தேனி நகர் பகுதியில் மூன்று இரயில்வே கிராசிங் அமைந்திருப்பதால் நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதை தவிர்க்க மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே செய்திருக்கும் நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். ஆய்வுப் பணியோடு கிடப்பில் போடப்பட்ட திண்டுக்கல் - லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரயில் பாதை திட்டத்தை முன்னிறுத்தி தங்களின் அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஏ.லாசர் கூறினார்.