நாடு விட்டு நாடு..... மதுபாட்டில்கள் வாங்க 3 மாவட்ட எல்லைகளுக்கு படையெடுத்த மதுரை குடிமகன்கள்
மதுரை: மதுரையில் லாக்டவுன் தீவிரமாக அமல்படுத்தபட்ட நிலையில் அண்டை மாவட்டங்களுக்கு படையெடுத்து சென்று மதுபானங்களை வாங்கி குடிக்கின்றனர் மதுரை குடிமகன்கள்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களப் போல மதுரையிலும் கொரோனா பாதிப்பு அதிகமானது. இதனால் 24-ந் தேதி முதல் மதுரையிலும் முழு லாக்டவுன் அமலுக்கு வந்தது.
உச்சத்துக்குப் போகும் கொரோனா- உஷாராக இப்பவே லாக்டவுனுக்கு தயாரான திண்டுக்கல்
படுதீவிர லாக்டவுன்
மதுரையின் அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. மதுரையில் பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய கடைகள் மட்டும் பகல் 2 மணிவரை திறந்திருக்கின்றன. வாகன சோதனைகள் படுதீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
குடிமகன்கள் திண்டாட்டம்
இந்த முழு லாக்டவுன் ஜூன் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். வேறுவழியே இல்லாமல் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைந்து சென்று அண்டை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் முட்டி மோதுகின்றனர்.
கல்லாபெட்டிகள் நிரம்புதாம்
திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுரை குடிமகன்களின் கூட்டம் கும்மியடிக்கிறது. இதுவரை ஏதோ தானோவென ஓடிக் கொண்டிருந்த இந்த எல்லையோர மதுபான கடைகள் இப்போது ஆஹோ ஓஹோவென கல்லாபெட்டிகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றனவாம்.
வாங்கி குவிக்கும் குடிமகன்கள்
இந்த கடைகளில் மதுபான விலை இப்போது மிகவும் கூடுதலாகவும் விற்பனை செய்யப்படுகிறதாம். அதைப்பற்றி எல்லாம் கவலை எதற்கு? பாட்டில் கிடைத்தால் போதும்.. அஞ்சு பத்து என வாங்கி பதுக்கி என்கிற முடிவோடு கத்தை கத்தையாக பணத்துடன் எல்லை மதுபான கடைகளில் குவிகின்றனர் மதுரை குடிமகன்கள். என்ன கொடுமை எனில் இங்கே சமூக இடைவெளியும் இல்ல- முக கவசமும் போடுவது இல்லை என்பதுதான்!