தொடரும் போக்குவரத்து விதி மீறல்.. மதுரை மாவட்டத்தில் ரூ. 2.41 கோடி வசூல்!
மதுரை: மதுரையில், போக்குவரத்து விதிகளை மீறிபவர்களிடமிருந்து ரூ. 2.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் குற்ற வழக்குகளை துணிச்சலாக கையாண்டு வருகிறோம். உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 270 வழக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த வகையில் ஒரு கோடியே 11 லட்சத்து 18 ஆயிரத்து 700ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் 2 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 600 ரூபாயை அபராதமாக வசூலித்து உள்ளோம்.
போக்குவரத்து வாகன விதிமீறல் களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 21 ஆயிரத்து 292 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல சாலை விபத்தில் கடந்த ஆண்டு 330 பேர் இறந்துள்ளனர். இது நடப்பு ஆண்டில் 238 ஆக குறைந்துள்ளது.
வாகன விபத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1471 விபத்துகள் ஏற்பட்டன. இது நடப்பாண்டில் 1227 ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டு சாலைவிபத்தில் 2210 பேர் படுகாயம் அடைந்தனர். இது நடப்பாண்டில் 1788 ஆக குறைந்துள்ளது.
தொடர்ந்து காவல் துறையினரின் செயல் துரிதப்படுத்தப்படும் எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை மீறாமல் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.