'2021இல் உள்ளாட்சி.. 2026இல் நல்லாட்சி..' விஜய் அரசியல் என்டரி எப்போது? அதகளப்படுத்தும் மதுரை ஃபேன்ஸ்
மதுரை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் விரைவாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, '2021இல் உள்ளாட்சி.. 2026இல் நல்லாட்சி' என்று மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளவர் விஜய். தமிழ்நாட்டில் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது.
விஜய் தனது அரசியல் நுழைவு குறித்து எந்த இடத்திலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும்கூட, அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றே அடித்துக் கூறி வருகின்றனர்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலர்கள்.. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பரபரப்பு புகார்!
தளபதி விஜய்
அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. கத்தி திரைப்படத்தில் இறுதியில் வரும் ப்ரஸ் மீட் காட்சியில் அவர் பேசும் வசனம் இன்றும் கூட அவரது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்-இல் தான் உள்ளது. அதன் பிறகு கிட்டதட்ட முழுநீள அரசியல் படமாகவே சர்கார் திரைப்படத்தில் அவர் நடித்திருப்பார். இப்படி தனது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய்.
தொடரும் சிக்கல்
அதற்கேற்ப பல ஆண்டுகளாகவே விஜய்யின் திரைப்படம் வெளியாகும் போது சிக்கல் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. தலைவா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த Time to lead என்ற ஒற்றை வரிக்காக அவரை படுத்திய பாடு அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கி அனைத்து படங்களின் வெளியீட்டின் போதும் விஜய் எதிர்கொண்ட சிக்கல்கள் பல. குறிப்பாக மெர்சல் திரைப்படம் வெளியான சமயத்தில் அவரது பேச்சுக்கு பாஜகவின் ஹெச் ராஜா சர்ச்சைக்குரிய பதிவுகளையும் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தினர்
ஆனாலும், மெர்சல் திரைப்படத்திற்கு பிறகும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுக்கப்பட்ட போதிலும், அவர் அஞ்சி மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை. மேலும் தனது திரைப்பட வெளியீட்டு விழாக்களிலும் விஜய்யின் பேச்சில் அரசியல் வசனங்கள் தெறிக்கும். இப்படி அரசியலுக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது. இந்தச் சூழலில் தான் தான் தற்போது நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவர் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் பெயரையும் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே பாணி
இது விஜய்யின் அரசில் வருகைக்கான தொடக்கப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த காலத்தில் விஜயகாந்த்தும் இதே பாணியைப் பின்பற்றித் தான் அரசியலுக்கு நுழைந்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கும் முன், தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அறிய விரும்பினார். இதனால் தேமுதிக தொடங்கும் முன்னரே தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வைத்தார். அந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர்கள் பலரும் வென்றனர். இப்போது இதே பாணியைப் பின்பற்றி நடிகர் விஜய்யும் பின்பற்றுகிறார்.
வைரல் போஸ்டர்
இந்தச் சூழலில் மதுரையில் விஜய் அரசில் நுழைவு குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர்கள் போட்டியிட அனுமதி அளித்துள்ளதைக் குறிக்கும் வகையில் '2021இல் உள்ளாட்சி.. 2026இல் நல்லாட்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு போஸ்டரில் 'தமிழக அரசியலின் மொத்த உருவமே' என்று ஒரு போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.