கை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்
மதுரை: மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் தனது ஒரு கையை இழந்த நிலையிலும், மண்பாண்டங்களை தயாரித்து அசத்தி வருகிறார்.
ஒரு மனிதன் தான் முன்னெடுக்கும் முயற்சிகளில் வரும் இடர்பாடுகளையும், தடைகளையும் களைந்து, முடியும் என்ற ஒற்றை வார்த்தையின் துணையோடு வீறுநடை போடுவதே தன்னம்பிக்கை ஆகும். ஒவ்வொரு துறையிலும் சாதனையாளர்களாக திகழ்பவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு உயர்ந்ததை அறிய முடியும்.
மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பிரபல தொழிற்சாலை ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பணியாற்றி வந்துள்ளார். ஒரு நாள் தொழிற்சாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேல்முருகன் விபத்தில் சிக்கி துரதிர்ஷடவசமாக தனது ஒரு கையை இழந்தார். இதனால் அவர் பணிக்குச் செல்ல முடியாத சூழல். வேல்முருகன் வீட்டில் முடங்கிகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர் குடும்பத்தை வறுமை வாட்டத் தொடங்கியது.
தன் முன்னேர்கள் செய்த மண்பாண்டத் தொழில் பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்ததால் அதையே தானும் செய்யலாம் என முடிவெடுத்த வேல்முருகன் மண்பாண்ட பொருட்களை தயாரிக்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு நிதியுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
கணவனின் முயற்சிக்கு உந்துசக்தியாக இருந்த வேல்முருகனின் மனைவி, தனது கழுத்து, காதில் அணிந்திருந்த நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை மண்பாண்ட பொருள் தயாரிப்புக்கான மூலதனமாக வழங்கியுள்ளார். மேலும், தனது கணவருக்கு உதவிக்கரமாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், விபத்தில் கையை இழந்த நிலையில் தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், மனைவியின் நகைகளை விற்றுத்தான் மண்பாண்டங்களை தயாரித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், நிரந்தர வருமானம் இல்லாத சூழல் உள்ளதால் தனது நிலை குறித்து பரிசீலித்து அரசு பணி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.