மகாளய அமாவாசை: தமிழகத்தில் முக்கிய கோவில்களில் திதி கொடுக்க தடை... வீட்டிலேயே வழிபடலாம்
மகாளய அமாவாசை தினமான நாளை ஏராளமானோர் திதி கொடுத்து முன்னோர்களை வழிபடுவது மரபு.
மதுரை: மகாளய அமாவாசை தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. மகாளயம் என்றால் மிகப்பெரிய என்று அர்த்தம். மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. கொரோனா லாக்டவுன் அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தொடங்கி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல் வரைக்கும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தர்ப்பணம் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
மகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுக்க தடை
திதி கொடுக்கலாம்
அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல கோவில்களிலும் முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரவர் வீடுகளிலேயே திதி கொடுக்கலாம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தன்று தமிழ்நாட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
காகங்களும் சனிபகவானும்
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது.
எமனும் முன்னோர்களும் திருப்தி அடைவார்கள்
முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
காக வடிவத்தில் முன்னோர்கள்
மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தினமான நாளைய தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எமதர்மன் மகிழ்ச்சி
புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.
தர்ப்பணம் தர தடை
திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் நாளை முழுவதும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தர்ப்பணம் தர தடை விதிக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் குளிக்க தர்ப்பணம் தர தடை
நெல்லை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கானோர் வருவார்கள். இந்த ஆண்டில் கொரொனா தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட தடை உள்ளதால் 18ஆம் தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை. பாபநாசத்தில் உள்ள அனைத்து நதிக்கரையிலும் யாரும் குளிக்கவும் அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வீடுகளில் பித்ரு தர்ப்பணம்
புனித தலங்களுக்குச் செல்ல தடை உள்ளதால் இந்த ஆண்டு அவரவர் வீடுகளிலே அந்தணர்களை வரவழைத்து பித்ரு பூஜையை செய்யக் சொல்லி பலன் பெறலாம். அன்னதானம், உடை தானம், பசு தானம், செருப்பு, குடை ஆகியவைகளை தானமாக கொடுக்கலாம். இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள் நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.