குட்கா முறைகேடு வழக்கு.. நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னர் சஸ்பெண்ட்!
மதுரை: குட்கா முறைகேடு வழக்கில் நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் குட்கா, போதை பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாதவரத்தில் ஒரு குட்கா கிடங்கு செயல்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மாதவரத்தில் சட்டவிரோதமாக குட்கா கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஒரு டைரியும் கிடைக்கப் பெற்றது. அதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை ஆணையராக இருந்த தற்போதைய டிஜிபி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த கிடங்கு செயல்பட அனுமதித்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2018-ஆம் ஆண்டு டெல்லி சிபிஐக்கு மாற்றப்பட்டது. புழல் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் மன்னர்மன்னன். செங்குன்றத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்ற வந்தவர் சம்பத்.
இவர்கள் அப்பகுதியில் பணியாற்றியபோது தான் மாதவரத்தில் குட்கா ஊழல் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இவர்களது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மன்னர் மன்னனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. குட்கா ஊழல் வழக்கில் காவல் துறை அதிகாரிகளை சிபிஐ விசாரித்தது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிலையில் நாளை அவர் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் மன்னர் மன்னனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ரயில்வே துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
பணம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது, எப்படி கைமாறியது என்பது குறித்தும் உணவு பாதுகாப்பு மற்றும் கலால் வரித் துறையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது குறித்து விசாரணை நடைபெற்றது.