மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai
மார்கழி மாதத்தில் சிவ பெருமானை வணங்குபவர்கள் திருவெம்பாவை பாடுவார்கள். பெருமாளை வணங்கும் வைணவர்கள் திருப்பாவை பாடுவார்கள். மார்கழி 19ஆம் நாள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பார்க்கலாம்.
மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். மார்கழி மாதம் 19 வது நாளில் திருப்பாவை, திருவெம்பாவையின் 19வது பாசுரத்தை பாடலாம். இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
திருப்பாவை - 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
திருவெம்பாவை - 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எங்கள் பெருமானே, உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற சொல் பழமையானது. அந்த சொல்லை புதுப்பித்துக் கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அதன்படி அருள் புரிவாயாக. எங்களுடைய தோள்கள் உன்னடியவர் தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லாததாக இருக்கட்டும். எங்களுடைய கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்தப் பணிகளையும் செய்யாது இருக்கட்டும். எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதனையும் காணாது இருக்கட்டும். எங்கள் தலைவனான நீ எங்களுக்கு இவ்வாறு அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு என்ன குறை? ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுவதும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே அடியவர்கள் விரும்புவர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.