அமைச்சரிடம் ஓட்டு கேட்ட மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்.. புன்னகை பூத்த செல்லூர் ராஜூ.. மைதானத்தில் கலகல!
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வாக்கு சேகரித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக ராஜ் சத்யனும் திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சு. வெங்கடேசனும் போட்டியிடுகிறார்கள்.
வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டோரிடம் சு. வெங்கடேசன் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது எதிரே அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கு வந்தார்.
உடனே வெங்கடேசன் அண்ணே, மறக்காம எனக்கு ஓட்டு போட்டுடுங்க என்றார். உடனே சுற்றியிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர். அமைச்சரும் லேசாக புன்னகை பூத்தவாறு வெங்கடேசனுக்கு கை கொடுத்து ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு நகர்ந்தார்.
அமைச்சரின் அரசியல் நாகரிகம் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.