மதுரை மேயர் பதவிக்கு காய் நகர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! திமுக தலைமையின் முடிவு என்ன?
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காய் நகர்த்த தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சியான திமுகவிடம், மதுரை மாநகராட்சியை தங்களுக்கு ஒதுக்கிக் கொடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேலிடப் பிரமுகர்கள் தூதுவிடத் தொடங்கியுள்ளார்களாம்.
இதனிடையே உள்ளூர் திமுக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிக்கு மதுரை மாநகராட்சியை விட்டுக்கொடுக்க கடும் ஆட்சேபனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் எதிரொலி.. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஓமிக்ரான் சிறப்பு வார்டு.. தமிழக அரசு நடவடிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி
திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாக நின்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தல் முறையா அல்லது மறைமுகத் தேர்தலா என்பது குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குள் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு இந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளை ஒதுக்கித் தர வேண்டும் என திமுக தலைமைக்கு குறிப்பு அனுப்பத் தொடங்கிவிட்டன.
மதுரை மாநகராட்சி
அந்தவகையில் மதுரை மாநகராட்சியை குறிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த விருப்பத்தை மதுரை திமுக நிர்வாகிகள் துளியும் விரும்பவில்லை. இந்நிலையில் கடந்தவாரம் மதுரை சென்ற கே.என்.நேருவிடம் இது தொடர்பாக மதுரை திமுகவினர் முறையிட்டுள்ளனர்.
நேருவிடம் புலம்பல்
கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது தலைவரின் முடிவு என்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் தாம் பேச முடியும் என்றும் அதற்கு மேல் தாம் தலையிடுவது முறையாக இருக்காது எனவும் நேருவிடம் இருந்து அவர்களுக்கு பதில் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனினும், மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் உள்ளூர் நிர்வாகிகள்.
முடிவில்லை
தற்போது மழைவெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் முழுக்கவனம் செலுத்தி வருவதாகவும், இன்னும் கூட்டணிக் கட்சிக் கோரிக்கைகள் குறித்து அவர் பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளின் பேச்சுநடத்த திமுக தலைமை விரைவில் குழு ஒன்றை அமைக்கும் எனத் தெரிகிறது.