ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கியது... அலங்காநல்லூரில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு, மருத்துவ பரிசோதனை கால்நடை மருத்துவர் ராஜா முன்னிலையில், நடைபெற்றது. காளைகளின் வயது, பற்களின் உயரம், நோய் அறிகுறிகள், மற்றும் உடல் தகுதி குறித்து, கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
உரிமையாளரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு காளைகளுக்கு உடல் தகுதி சான்று வழங்கப்பட்டது.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.